இறைச்சி சாப்பிடுவது துன்பங்களை ஏற்படுத்துகிறது நம் ஆரோக்கியத்தையும் பூமியையும் அழிக்கிறது

உலகம், முழுக்க நவம்பர் 25 உலக இறைச்சி இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது.  நம் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யும் பொருட்டு, மலேசியர்களும் இறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளுமாறும், சாத்தியப்பட்டால் இறைச்சி உண்பதை தவிர்க்குமாறும் இந்நன்னாளில் கேட்டுக்கொள்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

மக்களிடையே பெருகி வரும் வளமான வாழ்வின் காரணமாக இறைச்சி உண்பது அதிகரித்துள்ளது.  மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.  மலேசியாவில் வருடத்திற்கு ஒருவர் உண்ணும் இறைச்சியின் அளவு 1961-ல் 13.2 கிலோகிராமாக இருந்தது.  ஆனால் இது 2017-ல் 55 கிலோகிராமாக உயர்ந்துள்ளது.  மலேசியர்களின் வருமானம் பெருகி வருகின்ற காரணத்தால் எதிர்காலத்தில் மலேசியர்கள் இன்னும் அதிகமான இறைச்சி உண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 23 பில்லியன் கோழிகள், 1.5 பில்லியன் கால்நடைகள் மற்றும் 1 பில்லியன் ஆடுகள் மனிதர்கள் உண்பதற்காக இருக்கின்றன.  உலகம் முழுவதிலும் உள்ள 83% விவசாயப் பண்ணைகள் கால்நடை தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இறைச்சி உண்பதற்குச் சுவையாக இருக்கலாம்.  ஆனால் நிறைய துன்பங்களை அந்தப் பிராணிகளுக்கு மட்டுமல்லாமல் அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் சேர்த்தே கொண்டு வருகிறது.  உடல் பருமன், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இன்னும் பல தீவிர நோய்களுக்கும் இறைச்சி உண்பதற்கும் அதிக தொடர்பிருக்கிறது.

இறைச்சி அதிகம் உண்பதால் நமக்கு நோய் பாதிப்புகள் மற்றும் விரைவில் இறந்துபோவதற்கும் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.  இறைச்சி அதிகம் உட்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இருதய நோயும் புற்றுநோயும் அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இறைச்சிகள், குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகள் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்குப் போதிய சான்றுகள் இருப்பதாக அனைத்துலக புற்றுநோய் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சிகள், பாடம் பண்ண இறைச்சிகள், புளிப்பேற்றப்பட்டவை, புகைப்பதனம் செய்யப்பட்ட ஹோட் டாக்ஸ், சோசேஜ், உப்பிடப்பட்ட மாட்டிறைச்சி, இறைச்சி சார்ந்த சுவைச்சாறு (sauce), உலர்த்திய இறைச்சி, டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி ஆகியவை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அடங்கும் என்கிறது அனைத்துலக புற்றுநோய் ஆய்வு நிறுவனம்.

இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்தைக் குலைக்கலாம் என்பதைப் போன்றே அது சுற்றுச்சூழலுக்குப் பெருத்த கேட்டினை விளைவிக்கிறது என்பதனை பெரும்பாலான பயனீட்டாளர்கள் உணராமல் இருக்கின்றனர்.

கால்நடைப் பண்ணைகள் பெரிய அளவு பாதிப்புகளைக் கொண்டு வரும் மனித நடவடிக்கையாகும். உலகின் 40% நிலப்பரப்புகள் கால்நடைத் தீவனங்களை உற்பத்தி செய்வதற்கான பயிர்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  கால்நடைகளுக்கான விவசாயப் பண்ணைகள் போக்குவரத்துகளை விட 18% பசுமைக் குடில் வாயுவை உமிழ்கின்றன.  70% அமேசோன் காடுகள் கால்நடை மேய்ப்பு நிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இறைச்சி வேண்டுமென்றால் அதற்கு பிராணிகளை அறுக்க வேண்டும்.  பெரிய உற்பத்தி இடங்களாக இருக்கும் பெரும்பாலான அறுப்புக்கொட்டகைகளில் இருக்கும் பாதி-திறன் தொழிலாளிகள் மோசமான சூழ்நிலையிலேயே வேலை செய்கின்றனர். சில அறுப்புக்கொட்டகைகள் நாளுக்கு 85,000 கால்நடைகளின் தலைகள், 7,000 பன்றிகள், 12 மில்லியன் பறவைகளை அறுக்கும் அளவுக்குப் பெரியது.  ஆனால் இந்தத் தொழிற்துறை மக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படுகின்றன. இந்த அறுப்புக் கொட்டகைகளின் நெறிமுறைகளற்ற அறுப்பு முறைகளை பிராணிகள் நல குழுக்கள் கேள்வி எழுப்புகின்றன.

கால்நடை தொழிற்துறை வளர்ச்சிக்கு நாம் நிறைய வளங்களை அழித்துவிட்டோம்.  சூழல் மண்டலத்தையும் பாழ்செய்துவிட்டோம்.  உணவு, நீர் மற்றும் நில வளங்கள் எல்லாம் மனிதத் தேவையை பூர்த்தி செய்வதிலிருந்து விலகி, கால்நடைத் தீவனங்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  நைட்ரோஜன், பாஸ்பரஸ், பொட்டேஸியம், மருந்து எச்சங்கள், நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகள், அடர் உலோகங்கள் போன்ற கழிவுகளை அதிக அளவில் வெளியாக்குகின்றன.

இறைச்சி உற்பத்தியும் மிகவும் திறனற்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.  ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 6.5 கிலோ தானியங்கள், 36 கிலோ தவிடு மற்றும் 15,500 கனப்பகுதி தண்ணீரும் தேவைப்படுகிறது.

உலகம் முழுக்க தயாரிக்கப்படும் 70% எண்டிபையோட்டிக்குகள் கால்நடைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன.  எண்டிபையோட்டிக்குகளுக்கு இரு செயல்பாடுகள் உள்ளன. கால்நடைகளை அறுக்கும் வரைக்கும் அவை மோசமான சூழ்நிலையிலும் பிழைத்திருக்க உதவுகின்றன.  அதோடு பிராணிகள் விரைவில் வளர உதவுகின்றன.  மனிதர்களை விட பிராணிகளுக்குத்தான் அதிக எண்டிபையோட்டிக்குகள் கொடுக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பிராணிகளுக்கு கொடுக்கும் அதே எண்டிபையோட்டிக்கைத்தான் மனிதர்களுக்கும் கொடுக்கிறார்கள்.  ஒவ்வொரு முறையும் எண்டிபையோட்டிக் கொடுக்கும்பொழுது அதற்கான எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொள்ளும் திறன் நுண்ணுயிர்கிருமிகளுக்கு உண்டு. நோய்க்கிருமிகளான  இகோலாய், சல்மோனெல்லா  அல்லது கேம்பிலோபேக்டர் எல்லாம் வீரியம் பெற்று பிறகு மனிதர்களைப் பாதிக்கக்கூடும்.

மாடுகளுக்கு தீவனமாகக் கோழியின் எச்சங்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.  பிராணிகளின் பாகங்கள் பிராணிகளுக்கே உணவாக அளிக்கப்படுகின்றன.  (இதுபோன்ற நடவடிக்கை மாட்டுமூளை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்).  புழுக்களோ பிராணிகளுக்கு புரத உணவாக அளிக்கப்படுகின்றன.

இறைச்சி பெரும்பாலோருக்கு சுவையான உணவு.  இறைச்சிகளின் உருவாக்கத்தில் இருக்கும் படிகளை மக்கள் உணராத பட்சத்தில் இறைச்சி உண்பதிலிருந்து அவர்களுக்குத் தயக்கம் இருக்காது.  அவர்கள் வாங்கும் இறைச்சிகளைப் பற்றியும் அவர்கள் பெரிதாக தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.  எண்டிபையோட்டிக், ஹோர்மோன், நுண்ணுயிரிகள், பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், சுற்றுச்சூழல் நாசம் மற்றும் பிராணிகளுக்கு குப்பைகளை உணவாகக் கொடுப்பது பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இறைச்சி உண்பது திருப்தி அளிக்கலாம்.  இறைச்சி உண்பதால் யாரும் கெட்டவர்களாக மாறி விடுவதில்லை.  ஒருவர் சைவ உணவை மட்டுமே உண்டு மிக நல்லவராக மாறலாம் என்று கூறுவதற்கும் இல்லை.  ஆனால் மலேசியர்கள்  இறைச்சி உண்பது தொடர்பாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

இன்று இறைச்சி இல்லாத நாள்.  ஆகையால் பயனீட்டாளர்கள் இறைச்சி உண்பதை கணிசமான அளவில் குறைத்துக்கொள்ள வேண்டும்.  ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் கருதி முடிந்த வரையில் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதே நேரத்தில் நம்முடைய நாக்கின் சுவைக்காக கொல்லப்படும் கோடிக்கணக்கான பிராணிகளின் நிலையையும் இந்நாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
25.11.2020