தெலுக் பஹாங் மிதக்கும் தேர் ஊர்வலத்தின் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விளக்குகள் மூலம் கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்

பத்திரிக்கைச் செய்தி
17 பிப்ரவரி 2024

பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கம் மற்றும் தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் ஆகியவை எதிர்வரும் 24 பிப்ரவரி 2024 அன்று பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர் திருவிழாவான மாசி மக தெப்ப திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழி பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்து பக்தர்களை கேட்டுக்கொள்கிறது.

தெலுக் பஹாங்கில் உள்ள 117 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவனி தேர் ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு கடற்கரை திருவிழாவாகும்.

இந்த திருவிழாவின் போது கோயில் தெய்வங்களை சுமந்து கொண்டு விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேர், கடலில் உலா வரும்.

பாரம்பரியமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் பிரயாணத்தின் போது தங்கள் விருப்பப்படி கடலில் மிதக்க அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை கொண்டுவருவர்.

இந்த அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் பொதுவாக ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் என்ற நெகிழி பொருட்களில் தயாரிக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்படுகிறது.
மேலும், இந்த தட்டுக்கள் பாரம் இல்லாததால் தண்ணீரில் எளிதில் மிதக்கின்றன.

கடந்த காலங்களில், ஊர்வலத்திற்கு மறுநாள் ஆயிரக்கணக்கான செயற்கை நுரைப்பங்கள், நெகிழி தட்டுக்கள் கடலில் மிதப்பதைக் காண முடிந்தது.

நுரைப்பம் மற்றும் நெகிழி பொருட்கள் கடல் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் முக்கிய கடல் மாசுபாடு ஆகும்.

ஏனெனில் ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை மக்கும் தன்மையற்றவை மற்றும் சிறிய துண்டுகளாக உடைக்க முடியாது.

இவை மீன் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் உணவாக தவறாக உட்கொள்ளப்பட்டு, தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லப்படுகின்றன.

கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்க, பினாங்கு மாநில அரசு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இந்து சங்கம் மற்றும் கோயில் நிர்வாகம் ஆகியவை விளக்குகளுக்கு பாலிஸ்டிரீன் அல்லது நெகிழி அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன.

சுமார் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, வாழை மரத்தின் தண்டுகளின் அடுக்குகளில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டன, இது சிறந்த தேர்வாகும், ஏனெனில் அது நன்றாக மிதப்பது மட்டுமல்லாமல் கடலில் மக்கும் தன்மையையும் பெறுகிறது.

கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று வழிகளை ஊக்குவித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் கோயில் நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எனவே பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு, பினாங்கு மாநில இந்து சங்கம், மற்றும் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டுக்கள், வாழை மரத்தின் தண்டுகள் போன்றவற்றில் விளக்குகளை மிதக்க வைக்க பக்தர்களை கேட்டுக்கொள்கிறது.

இத்திருவிழாவானது வாழ்வாதாரத்திற்காக இறைவனுக்கும், இயற்கை அன்னைக்கும், கடலுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அமைந்திருப்பதால், இவ்விழாவை மேலும் அர்த்தமுள்ளதாக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளை மேற்கொள்வதே பொருத்தமானதாகும்.

மான்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

என்.வி. சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

தர்மன் ஆனந்தன்
தலைவர்
பினாங்கு மாநில இந்து சங்கம்

ஏ.கனபதி
தலைவர்
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயம் தெலுக் பகாங்.