விலைவாசி உயர்வு: கறிவேப்பிலை கிலோ RM18-ஆ? பகற்கொள்ளை என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிருப்தி!

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) சந்தைகளில் விற்கப்படும் கறிவேப்பிலை விலையேற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு கிலோ RM18-க்கு விற்பனை செய்யப்படுவது பயனீட்டாளர்களை ஏமாற்றும் “பகற்கொள்ளை” என்று அது வர்ணித்துள்ளது.

தற்போது சந்தைகளில் (Wet Markets) கறிவேப்பிலை ஒரு கிலோ RM14 முதல் RM18 வரை விற்கப்படுகிறது. ஆனால், உள்ளூரில் பயிரிடப்படும் பட்சத்தில் இதன் விலை ஒரு கிலோ வெறும் RM1-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வில், சுமார் 100 கிராம் எடை கொண்ட ஒரு சிறு கட்டு கறிவேப்பிலை RM3 முதல் RM4 வரை விற்கப்படுவது தெரியவந்தது. இது ஒரு கிலோ கணக்கில் கணக்கிடப்படும்போது மிக அதிக விலையாகும்.

“முன்பெல்லாம் தேங்காய் வாங்கினால் கறிவேப்பிலை இலவசமாகக் கொடுக்கப்படும். ஆனால் இன்று மக்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்,” என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாயப் பயிற்சி அதிகாரி திரு. என். வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

குறிப்பாக பினாங்கு, லிட்டில் இந்தியா போன்ற தேவை அதிகம் உள்ள இடங்களில் வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதாகக் கருதப்படுகிறது.

விலைவாசி உயர்விலிருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீடுகளிலும், குறிப்பாக இல்லத்தரசிகள் சொந்தமாக கறிவேப்பிலை செடியை வளர்க்க வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.

ஒரு செடியை வளர்க்க வெறும் RM1 மட்டுமே செலவாகும். இதற்குப் பெரிய இடம் தேவையில்லை; ஒரு சிறிய தொட்டி, மண் கலவை மற்றும் விதைகள் இருந்தால் போதுமானது. வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இல்லாததால், அவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.  மலேசியர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளையும் மூலிகைகளையும் வளர்ப்பதன் மூலம், அதிகரித்து வரும் உணவு விலைச் சுமையைக் குறைப்பதோடு, ஒரு நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகர முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
முழுச் செய்திக்கு :
THE SUN NEWS PAPER